வெள்ளி, 16 நவம்பர், 2012

முடிந்தது தீபாவளி


தீபாவளி முடிந்து 3/4 நாட்களாகிவிட்டன. ஒரு பட்டாசைப் போல நொடியில் வெடித்து முடிந்துவிட்டதோ எனத் தோன்றுகிறது தீபாவளி.

ஆம். அன்று காலை விடிந்தது. மளமளவென்று விரைந்தது. முடிந்தும் விட்டது.  விடியலில் எழுந்து எண்ணெய் தேய்த்து, புதிய உடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து, டிவி பார்த்து முடிப்பதற்குள்ளாக இரவு வந்து முடிந்து அடுத்த நாள் துவங்கிவிட்டது. ஒரு க்ஷண ம்தான் இருந்தது போலிருக்கிறதா தீபாவளி?

ஆம் இது புதிதல்ல. ஒவ்வொரு வருடமும் இப்படித்தான். அப்போது என்னதான் கொண்டாட்டம் தீபாவளியில்? ஏன் இப்படி மாய்ந்து போகிறோம் தீபாவளி தீபாவளி என்று?

உண்மையில் உற்சாகம் தீபாவளி அன்று அல்ல - அதற்குத் தயாராவதில்தான் இருக்கிறது. 

3/4 மாதங்களுக்கு முன்பாகவே ரெயிலில் டிக்கெட் பதிவு செய்கிறோமே, அன்றே துவங்கிவிடுகிறது தீபாவளி உற்சாகம்.

"உனக்கு கிடைத்ததா, எனக்கு கிடைத்து விட்டது"
"பரவாயில்லை தத்கல்லில் பார்த்துக்கொள்ளலாம்; அல்லது ஏதாவது ஸ்பெஷல் விடுவார்கள்"

சந்தோஷம், ஏக்கம், எதிர்பார்ப்பு, சாதனை எல்லாம் அந்த நொடியில் இருந்து தொடங்கிவிடுகிறது.

பிறகு துணி வாங்குவது. ஒரு சிலர் லீவ் எல்லாம் போட்டு குடும்பத்தோடு கடைக்குச் சென்று துணி வாங்குவதை ஒரு விழா போல கொண்டாடுவது உண்டு. காஞ்சிபுரம் போய் பட்டு புடவை வாங்கி வருவது உண்டு. ("இருந்தாலும் சுஜாவுக்கு மட்டும் எப்படி மெட்ராசிலேயே அவ்வளவு அகல பார்டர் கிடைச்சது? நாம்தான் தண்டத்துக்கு ஊர் சுத்தி வந்திருக்கோமோ?")
சுடிதார் துணி வாங்கி டெய்லர் சீக்கிரம் குடுப்பாரா என்று காத்திருந்து...

ஆண்கள்  விஷயத்தில் கொஞ்சம் பரவாயில்லை. பலர் துணி வங்கி தைத்தாலும், பெரும்பாலும் ரெடிமேட், ஜீன்ஸ் என்று போய்விடுகின்றனர். ஒரு நாள் முன்னாடி வாங்கினால் கூட  போதும். (நான் இந்த முறை முந்தின நாள் இரவு கடை மூடும் நேரத்தில் தான் வாங்கினேன். "சார் க்ளோசிங் டைம் சார் " என்று பின்னாலேயே துரத்தி வந்தார் கடை சிப்பந்தி. பாவம் அவருக்கும் அடுத்த நாள் தீபாவளிதானே) 

இருந்தாலும் சின்ன வயதிலெல்லாம் ஒரு 10-15 நாட்களுக்கு முன்னாடியே தைத்து வைத்து விடுவார்கள். தினம் தினம் பீரோவைத் திறந்து அதைப் பார்த்து பார்த்து சந்தோஷப் பட்டு....அடடா! அது ஒரு தனி சுகம்!(எனக்கெல்லாம் தீபாவளிக்கு உள்ளாடை முதற்கொண்டு புதிதாய் இருக்க வேண்டும்) உறவினர்கள் நண்பர்களுக்கு புது டிரஸ்ஸை காட்டும் சாக்கில் பல முறை போட்டுப் பார்த்து விடுவோம். இருந்தாலும் தீபாவளி அன்று போடும்போது ஒரு அலாதி இன்பம்தான். 

அப்புறம் இருக்கவே இருக்கிறது பட்டாசுகள். நானெல்லாம் சிறுவயதில் ஒரு தீவிரவாதியைப் போல் பட்டாசு வெடிப்பேன். ஒரு வாரமாக கடைகளையெல்லாம் நோட்டம் விட்டு மனதிற்குள் லிஸ்ட் போட்டு, 3/4 நாட்களுக்கு முன்பே போய் கடையில் (கூட்டம் கம்மியாயிருக்கும்) பட்டாசு வாங்கி விடுவோம். அது நமத்துப் போகாமலிருக்க தினமும் வெயிலில் காய வைக்க வேண்டும் . அப்போது அதை ஆசை ஆசையாய் தொட்டு தடவிப் பார்த்து (அன்றைக்கே வெடிக்கவும் மனசு வராது) மீண்டும் மூட்டை கட்டி வைத்துவிடுவோம். எதை எதை எப்படியெல்லாம் வெடிக்கப் போகிறோம் என்று திட்டமிட ஆரம்பித்து விடுவோம். சில லோக்கல் வெடிகளை மட்டும் முன்பிருந்தே வெடிக்க ஆரம்பித்து விடுவோம். 

குறிப்பாக இந்த ரயில்வே தண்டவாளத்தின் ஸ்லீப்பர் கட்டைகளை தாங்கிப் பிடிப்பதற்கு ஒரு சிறிய இரும்பு உலக்கை போன்ற வஸ்து இருக்கும் (இப்போதெல்லாம் போல்ட் செய்து விடுகிறார்கள்) அதை வர்க் ஷாப்பில் கொடுத்து\ அதன் தலையில் ஒரு குழியை ட்ரில் செய்து தரக் சொல்லி வோடுவோம். அதற்கு "டும் குழாய்" என்று பெயர். 

பின்னர் கடையில் கந்தகம் (sulphur) வாங்கி அதை கொஞ்சம் கொஞ்சமாய் அந்தக் குழியில் நிரப்பி, அதன் மேலே' ஒரு ஆப்பு அல்லது போல்ட்டை வைத்து ஓங்கி அடித்தால் "டமார்" என்ற சத்தத்துடன் அது வெடிக்கும். பெரிய அளவில் புகை (கந்தக வாசனையுடன்) கிளம்பும். அரை மணி நேரம் விளையாடினால் உடம்பெல்லாம் புகை நாற்றமடிக்கும். அதே கந்தகத்தை ஒரு சிகரெட் பெட்டியில் உள்ள அலுமினியம் காகிதத்தில் மடித்து வைத்து வெடித்தால் அந்த எஃபெக்டே தனி. ஏனென்று யாராவது கெமிஸ்ட்ரி படித்தவர்கள் இருந்தால் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். 

தீபாவளி நாள் வரும் வரை இதுதான் எங்கள் பட்டாசு உலகம். ஆனாலும் அந்த நிஜப் பட்டாசுகளை வெடிக்கும் நேரத்துக்காகக் காத்திருப்பதில் ஒரு சுகம். 

(அதை விட சுகம் தீபாவளி அன்று வெடித்து முடித்த பின்பு தெருவில் இறைந்து கிடக்கும் வெடிக்காத பட்டசுகளை எல்லாம் பொறுக்கி, ஒரு காகிதத்தில் கொட்டி, அதற்கு நெருப்பு வைத்து புஸ்ஸ்ஸ்...)

பிறகு வீட்டில் நடக்கும் தின்பண்ட ஏற்பாடுகள். சில சமயம் வீட்டிலேயே செய்வார்கள். அல்லது 2/3 குடும்பங்கள் சேர்ந்து ஒரு சமையற்காரரை அழைத்து பொதுவாய் செய்து கொள்வார்கள். அதுவும் 3/4 நாட்களுக்கு முன்னதாகவே தயாராகிவிடும். தினம் போகிற வருகிற சாக்கில்....("ஒண்ணுமில்ல மூடி  லூசாயிருந்த்து சரியாக மூடினேன்" "கரகரப்பு சரியாயிருக்குறதா என்று பார்த்தேன்"  etc.,etc.,)
இருந்தாலும் தீபாவளி வரப்போவதை அது நினைவு படுத்திக் கொண்டே இருக்கும். அது ஒரு சுகம். 

பின்னர் ஊரிலிருந்து மாமா மற்றும்  உறவினர்கள் வருவதாய்க் கடிதம் போட்டிருப்பார்கள். பேச்சிலர் மாமாக்கள் எல்லாம் தீபாவளிக்கு முன்தினம் இரவுதான் ஊரிலிருந்து வருவார்கள். அவர்தான் ஆட்டம் பாம், நாக் அவுட் பாம்  எல்லாம் கொண்டு வந்து வெடிப்பார். அதைப் பற்றிய கற்பனைகளில் சில நாட்கள் மிதந்து கொண்டிருப்போம். 

இப்படி பார்த்து பார்த்து தயாராவதில்தான் நிஜமான தீபாவளி  சந்தோஷம் இருப்பதாகத தோன்றுகிறது, 

திடீரென வந்தே விடும் தீபாவளி. 


அது க்ளைமாக்ஸ். 

அந்த நேரத்தில், கணத்தில் 'நாம் இவ்வளவு நாள் எதிர்பார்த்திருந்த தீபாவளி என்கிற தருணத்தில் இப்போது இருக்கிறோம்' என்ற நினைப்பே பல சமயம் நமக்கு இருப்பதில்லை/பரபரபரவென்று அன்றைய தினம் ஓடி முடிந்து விடுகிறது.

போதாக்குறைக்கு   டிவி நிகழ்ச்சிகள் வேறு வந்துவிடுவதால் தீபாவளியின் contextடே  மாறிவிட்டதோ எனத் தோன்றுகிறது. 

ஆனாலும் அந்த தீபாவளியின் எதிர்பார்ப்பு....காத்திருத்தல்.......அது தனி உற்சாகம் தான். 
நம் மனம் கவர்ந்தவளிடம் போய் நம் காதலைச் சொல்லுவதற்கு முன் வரை இருக்குமே ஒருவித anxiety....மனதுக்குள்ளே ஒரு பட்டாம்பூச்சி! அந்த மாதிரி ஒரு த்ரில் தான் அந்த தீபாவளி எதிர்பார்ப்பு!

நம் வாழ்க்கையில் கிடைக்கக் கூடிய சின்ன சின்ன சந்தோஷங்களில் ஒன்று இந்த தீபாவளி  ஆயத்தம்  என்று கூடச் சொல்லலாம்.

எத்தனையோ பண்டிகைகள் நம் வாழ்வில் வந்தாலும் தீபாவளி ஒரு தனி சுவாரசியம் தான் சந்தோஷம்தான்.

அந்த சந்தோஷம் என்றும் நிலைத்திருக்கட்டும். 

(அடுத்த வருடத்திற்கு இப்போதே) தீபாவளி நல்  வாழ்த்துக்கள்!



வெள்ளி, 9 நவம்பர், 2012

என்ன சத்தம்........

நேற்று இரவு வெளியில் ஒரு நண்பரைச்  சந்தித்து விட்டு சற்று தாமதமாக வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். சுமார் 10 மணி இருக்கும். எங்கள் தெருவுக்கு முந்தைய சாலையில் காரைத் திருப்பும்போது வானொலியில்  அன்று கமலஹாசனின் பிறந்த நாலை முன்னிட்டு புன்னகை மன்னன் படத்திலிருந்து "என்ன சத்தம் இந்த நேரம்.." பாடலை ஒலி பரப்பியது. அவ்வளவுதான், நான் அங்கேயே சாலை ஓரத்தில் வண்டியை நிறுத்தி விட்டு முழு பாடலையும் கேட்க ஆரம்பித்தேன்.எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத ஒரு சில விஷயங்களில் இது ஒன்று.

அந்த இன்ஜின் சத்தம், ஏ .சி. சத்தம் கூட தொல்லை தரக்கூடாது என அணைத்துவிட்டு பாட்டை கேட்டேன்.

ஆஹா... என்ன அற்புத அனுபவம். இத்தனை ஆண்டுகள் ஆகியும் கூட அந்த பாடலில் என்ன கனம், என்ன சுவை?

படத்தின் ஆரம்பத்திலேயே வரும் ஒரு பாடல் அது. 10 நிமிடங்களில் முடியப் போகிற ஒரு காதலை அவசர அவசரமாக படம் பார்ப்பவர்களுக்கு விளக்கியாகவேண்டிய ஒரு கட்டாயம் இயக்குனருக்கு. பாலச்சந்தராயிற்றே..அந்தப் பொறுப்பை இசை ஞானியிடம் விட்டார். 

ஒரே ஒரு பாடல். முடித்து கொடுத்தார் ராஜா.
Mission Accomplished.

எந்தப் பீடிகையும் இல்லாமல் ஒரு சின்ன கிடாரின் வருடலோடு உடனே பல்லவி.

என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா?
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா?

இப்போது ஒரு மிதக்கும் கிடார் சுரங்கள். அதோடு கூட  

கிளிகள் முத்தம் தருதா? அதனால் சத்தம் வருதா?
அடடா..- (என்ன சத்தம்)
 
(அந்த "அடடா" வில் S.P.B. ஒரு உருகு உருகியிருப்பார். அது தனி கதை. )

இப்படி உடனடியாக ஆரம்பித்த வேகத்தை கேட்டு  மனது  அமைதியாகிவிடும். என்ன சத்தம் என்று தேடுவதைப் போல 

இப்போது ஒரு 4 அக்ஷரத்திற்கு (1..2..3..4) ஒரு நிசப்தம்...........

இளையராஜா சொல்லுவார் நிசப்தம்  கூட ஒரு இசைதான் என்று.. அதை இந்த இடத்தில் நான் அனுபவித்திருக்கிறேன். நமது மனமே எந்த எதிர்ப்பார்ப்புகளும்  இன்றி ஒரு ஒரு வினாடி அடங்கிவிடும்.
 
பிறகு மெல்லியதாய் வருடுகின்ற ஒரு குழல்(flute). அதுவும் கூட ரகசியமாய் நம் காதுகளிலே இசைப்பது போல இருக்கும். அதைத் தொடர்ந்து  லேசான ட்ரம்பெட் சுரங்களோடு "தனன தனன.." என்று துடித்து சரணத்திற்கு வழிவிடும்.

கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே!
கண்களில் ஏந்த கண்ணீர் அது யாராலே?
கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே!
காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே!
மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு!
ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு!
ஆரிரரோ! இவர் யார் எவரோ?

பதில் சொல்வார் யாரோ?  (என்ன சத்தம்)
 
மீண்டும் அதே அமைதி. இப்போது மனமும் அந்த அமைதிக்குத் தயாராகிவிட்டது. இப்போது மிக மிக அருமையான கிடார் composition. 
லேசாய் ஊஞ்சலாடும் ஒரு இசைக்கோர்வை. கூடவே ட்ரம்பெட் மெதுவாய் சேர்ந்து அடுத்த சரணத்தை துவக்கிவிடும். அற்புத அனுபவம்.
 
கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ!
தன் நிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ!
உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து போனதோ!
உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ!
மங்கை வள் வாய் திறந்தால் மல்லிகைப்பூ வாசம்!
ஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்!
யார் இவர்கள்? இரு பூங்குயில்கள்!
இளம் காதல் மான்கள்  (என்ன சத்தம்)
 
மெலிதான ஆர்ப்பாட்டமில்லாத ரிதம். ஒரே தாள வரிசை. எந்த மாயாஜாலங்களும் இல்லாத தெளிந்த நீரோடை போன்ற ஒரு melody.
பாடல் வரிகள் அப்படி ஒன்றும் பிரமாதமாக இருப்பதாய் நான் கருதவில்லை. 
 
"சிலுவைகள் இல்லை சிறகுகள் ரெண்டில் என்ன தரப் போகிறாய்
 
போன்றோ அல்லது 
 
"கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ, காதல் என்ன காற்றிலே குலைந்து போகும் மேகமோ"
 
போன்றோ நின்று நிலைத்து நினைவில் நிற்கும் வரிகளாக எதுவும் இங்கே காணப்படவில்லை.
 
காரணம் நமக்கே அந்த காதலர்கள் 10 நிமிடத்திற்கு மேல்  பரிச்சயமில்லை.  அவர்கள் காதலின் வலிமையோ வலியோ ஒன்றும் நமக்கு தெரியாது. ஆனால் இதெயெல்லாம் தெரிந்து தான் பாலசந்தர் இந்த சிச்சுவேஷனை இளையராஜா கையில் கொடுத்துவிட்டார் போலிருக்கிறது.

வெறும் இசையிலேயே அந்த காதலர்களை அமரத்துவம் அடையச் செய்து விட்டார் ராஜா  என்றுதான் சொல்லவேண்டும்.

பாட்டு முடிந்துவிட்டது. ஆனால் அந்த அனுபவம் முடியவேயில்லை. 
ஒவ்வொரு சுரமும் என்னைச் சுற்றி வந்து "போதுமா போதுமா" என்று கேட்பது போலவே இருந்தது.
 
அந்த interludeகளுக்கு இடையே வரும் அமைதி மனதை என்னவோ செய்துகொண்டிருந்தது. வெளியே நகரமும் அந்த அமைதியைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. ஒருவேளை அதற்கும் இந்தப் பாடல் பிடித்திருந்ததோ?


திங்கள், 29 அக்டோபர், 2012

முதல் காதல்

(என்னுடைய பிந்தைய பதிவை படித்து நேரிலும் தொலைபேசியிலும் வலைத்தளத்திலும் கருத்து தெரிவித்தவர்களுக்கு நன்றி. சற்றே "கன"மான (heavyயான)தாகக்  கருதப்பட்ட அந்தப் பதிவுக்குப் பின். இப்போது என்னுடைய கவிதை ஒன்றை கீழே வெளியிட்டுள்ளேன். படித்து ரசித்து உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.)

முன்பொரு நாள்....

பொன்னிற வெயிலின் மாலை
பொழுதினைப் போக்கவெண்ணி
கண்ணிரு பக்கம் சுழற்றி
காலாறச் சென்ற பொழுது

சுந்தர வடிவந்தாங்கி
சுடரொளி முகமுந்தாங்கி
அந்தரப் பறவை போல
அழகிய வளைவுந்தாங்கி

சென்னிற உடலுந்தாங்கிŽ
செங்கதிர் ஒளியுந்தாங்கிŽ
என்னிரு கண்ணில் பட்டாய்
என்னுளந்தன்னை தொட்டாய்

தன்னிரு €கையாலுன்னை
தழுவிட ஆசைப்பட்டேன்
தன்னிலை உணர்ந்ததாலே
தயங்கியே நின்று விட்டேன்

கண்ணிமை மூடவில்லை
கால்களோ நகரவில்லை
என்னையே மறந்து உந்தன்
எழிலினில் மயங்கி விட்டேன்

சிந்திய சில்லரை போல
சிரிக்கையில் நானும் உந்தன்
மந்திர மொழியைக் கேட்டு
மதியினை இழந்து விட்டேன்

"பொன்னவிர் மேனியாளை
பொறுத்துத்தான் அடைய வேண்டும்
என்னரும் காதற்கிளியை
எதிர்காலம் சேர்க்க வேண்டும்"

எண்ணங்கள் பலவும் மனதில்
ஏதேதோ கதைகள் சொல்ல
இல்லந்தான் திரும்பி விட்டேன்
இதயத்தை உன்னில் விட்டு

படிப்பினை முடித்து, பின்னர்
பட்டங்கள் பெற்று, ஆலைப்
'படிப்பினை' பெற்றிடவேண்டி
பணியினில் சேர்ந்தபோதும்

பலப்பல மாதம் கழித்து
பணி நிலை பெற்ற போதும்
பாவியென் உள்ளம் தினமும்
பறந்திடும் உந்தன் நினைவில்

இறுதியாய் ஒருநாள் நானும்
இன்பத்தில் நீந்திவிட்டேன்
இதயத்தைத் தொட்ட உன்னை
இரு€கையில் ஏந்தி விட்டேன்

அதுமுதல் மகிழ்வே ஆஹா
அளித்தனை என் YAMAHA!

புதன், 24 அக்டோபர், 2012

மொழியும் நாமும்



என் மொழி தமிழ் வாழ்க! இன்ன பிற மொழிகளும் வாழ்க! 

முதலாவதாக மொழி என்பது ஒரு தகவல் தொடர்பு சாதனம். எத்தனையாவது முறையாக சொன்னாலும் அது ஒரு தகவல் தொடர்பு சாதனம்தான். உடல் செய்கைகளால் உடனடித் தகவல் பரிமாற்றம் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் அத்தகவல்களை அனுபவங்களாக மாற்றம் செய்துகொள்ள முடியவில்லை. “Cognitive” என்று ஆங்கிலத்திலே சொல்வது போல தகவல்களை புரிந்துணர்ந்து நினைவுகளில் சேமித்து வைத்து பகுத்தறிந்து பயன்படுத்த ஒரு ஊடகம் மனிதனுக்கு தேவைப்பட்டது. எனவே மொழி உருவானது.

அதைத் தொடர்ந்து அமைப்பு ரீதியாக அது செம்மைப் படுத்தப் பட்டது. இலக்கணங்கள் உருவாயின. மனித குல வரலாறு பதிவு செய்யப்படலாயிற்று. பண்பாட்டு கலாசார சின்னமாக மொழி கருதப்படலாயிற்று.

அங்கிருந்து மொழியின் அடையாளங்கள் மாறலாயின. மனிதன் தன் தனிப்பட்ட சமூகத்தின் அடையாளமாக மொழியை பார்க்கத் துவங்கினான். Ego என்று சொல்லப்படும், உலகின் பல்வேறு பிரச்னைகளின் மூலகாரணமான ஆணவம் மொழியின் மூலமாகவும் வெளிப்படலாயிற்று. மொழி மெல்ல மெல்ல ஒரு சமுதாய அந்தஸ்தின் அடையாளமாக மாற ஆரம்பித்தது. மேல் தட்டு மக்கள், கீழ்தட்டு மக்களின் அடையாளங்கள் மொழியால் பிரிக்கப் பட்டன. (தேவ பாஷை, நீச பாஷை, Royal English, cockney)
என் மொழி எனக்கு மிக மிக உசத்தியானதுதான். கண்டிப்பாக. ஏனென்றால், எனக்கு வாழ்க்கை ஆரம்பித்ததே அதில்தான். நான் பாசம், நேசம், தேசம் எல்லாவற்றையும் அறிந்துகொண்டது அதன் மூலம்தான். ஆனால் அந்த மொழியை ஒரு அடையாளமாக்கிவிட வேண்டாம் என்பது தான் என் வேண்டுகோள். அப்படிச் செய்யும்போது அதன் “பொது”த்துவம் போய் விடுகிறதோ என்கிற பயம் எனக்கு வருகிறது. என்னை, என் சமூகத்தை தனிப்பட்ட காரணங்களுக்காக அசிங்கப்படுத்த நினைக்கிறவர்கள் என் மொழியை கேவலப்படுத்தி மகிழ்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட மொழி பேசுபவன் என்கிற காரணத்தால் ஒருவன் தாக்கப்படுகிறான். ஒரு மொழியில் எழுதப்பட்ட எல்லா அறிவிப்புகள், குறியீடுகள், நூல்கள், இலக்கியங்கள், வரலாற்றுப் பதிவுகள் எல்லாமே அழிக்கப் படுகின்றன.
சுஜாதாவின் ஒரு கதையிலே ஒரு ஈழத்தமிழ் எழுத்தாளர் சொல்லுவார் ஒரு தமிழ் நூலகம் சிங்களர்களால் எரிக்கப் பட்டதைப் பற்றி. (நான் அரசியல் பேசவில்லை. இது ஒரு உதாரணம்தான்) இங்கே மொழிச் சுவடுகளை அழிப்பது ஒரு இனத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும், பழி வாங்கும் ஒரு ஸாடிஸத் திருப்தியை அளித்திருப்பது வருந்தத் தக்கது.
எனவே, சற்றே மாறிப் பார்த்தாலென்ன? மொழியை ஒரு ஊடகமாக மற்றும் கருதிப் பார்ப்போம். பண்பாடு, கலச்சாரம் எல்லாம் நம் அணுகுமுறை, ஒழுக்கம், தன்மை சம்பந்தப்பட்ட வெளியீடுகள். ஆனால் மொழி என்பது இவற்றைப் பற்றியெல்லாம் வெளி உலகிற்குத் தெரியப் படுத்த உதவும் ஒரு கருவி. தமிழன் வாழ்வின் சிறப்பைப் பற்றி எந்த மொழியிலும் தெரிவிக்கலாம். அதை முதலில் தமிழர்கள் பதியும் போது தங்கள் மொழியில் பதிந்தார்கள் அவ்வளவுதான்.
அப்போது தமிழில் உணர்வை வெளியிட்டால்தான் தமிழர் கலாச்சாரம் என்ற எண்ணம் மறையும். தமிழில் உணர்வை வெளியுடுவதாலேயே அதை எதிர்க்கும் போக்கும் மாறும்.
உணர்வு ரீதியாக மொழியை அணுகுவதை விட, தேவை ரீதியாக அணுக வைப்போம். மொழியை வாழ்க்கையின் இயல்பான ஒரு விஷயமாக ஆக்குவோம். அப்போது ஏற்றுக்கொள்ளும் தன்மை வளரும். அறைகுறை ஆங்கிலத்தில் பெருமை பேசுவது குறையும்.
Monday morning வந்தாச்சேன்னு  feel பண்ணிக்கிட்டு இருக்காதீங்க; வேற என்ன பண்றது? Somehow cheer up பண்ணிகிட்டு எழுந்து offiiceக்கு readyயாகுங்க” 
--என்கிற மாதிரியான FM அலைவரிசை தொல்லைகள் எல்லாம் ஒழியும். இது என்ன கொடுமை? ஓய்வு நாள் முடிந்து வேளை நாளில் சுறுசுறுப்பாக இருக்கவேண்டியவனை இன்னும் வெறுப்பேற்றிக்கொண்டு? இதுதான் கலாச்சாரச் சீரழிவு. இதை ஆங்கிலத்தில் செய்தால் என்ன தமிழில் செய்தால் என்ன?
ஆங்கிலம் தவறல்ல. நமக்கு எட்டுத் திக்கும் செல்ல உதவுகிற ஒரு நல்ல மொழி தான் அது. தெரிந்தோ தெரியாமலோ ஆங்கிலேயன் நமக்குக் கற்றுத் தந்ததால், இன்று உலகம் முழுதும் பரவி வென்று வருகிறோம். ஆனால், ஆங்கிலம் பேசுபவர் தான் பெரிய ஆள் என்று “குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல்” உருவானதுதான் இங்கே தவறு.
நல்ல திறமையுள்ள ஒரு சில நண்பர்கள் என்னிடம் வந்து “என்ன ஸார் பண்றது? எனக்கு communication skills பத்தாது” என்று புலம்பிக் கொள்கிறார்கள். அவர்கள் சொல்லுகின்ற அந்த skill வெறும் ஆங்கிலம் பேசமுடியாதது மட்டும் அல்ல. ஆங்கிலம் பேச முடியாததால் நான் உலகில் வேறு எதற்குமே லாயக்கில்லாமல் போய்விட்டேன் என்கிற உணர்வு. தமிழ் பேசுவது அந்தஸ்து ரீதியாக மட்டம் என்கிற தாழ்வு மனப்பான்மை.
இதற்கு முதல் காரணம் இவ்விரண்டு மொழிகளையும் (இன்ன பிற மொழிகளயும்) சமுதாய, கலாச்சார அடையாளங்களோடு இணைத்துக் கொண்டதுதானோ என்று சில சமயம் தோன்றுகிறது. ஆங்கிலத்தை ஒரு மொழியாக அல்லாமல் ஒரு பாடமாக கற்று வந்திருக்கிறோம். உருப்போட்டு இலக்கணங்களை மனனம் செய்து இன்னொருவர் மொழியாகவே ஆங்கிலத்தைப் பார்த்து எப்படி கற்க முடியும்? எனவே மேற்கொண்டு முன்னேற நினைக்கும்போது ஒரு மொழியாக தகவல் பரிமாறிக்கொள்ளமுடியாமல் தவிக்கிறோம்.
இன்னோர் புறம் தமிழாக்குவோம் என்று “வன்பொருள் தானியங்கி உதிரியகம்” என்றெல்லாம் பெயர் வைத்து பயமுறுத்தும் கொடுமை. தமிழாக்க வேண்டியதுதான். தவறில்லை. ஆனால் அதற்கென்று ஒரு அமைப்பு, ஒரு வரையறையே இல்லை. இந்த தமிழாக்கம் சரியா தவறா என்றெல்லாம் யாரும் ஆராய்வதில்லை. காலத்துக்கேற்றார்போல் மொழியும் வளர வேண்டும். நிகழ்கால நடைமுறை வாழ்க்கையை சேர்ந்து இயைந்து இருக்க வேண்டும்.
பாரதி எழுதிய தமிழிலே ஸ்த்ரீகள், புருஷர்கள், ஸர்வகலாசாலை, காரியதரிசி என்றெல்லாம் வருகிறது. இப்பொழுது அதையெல்லாம் நாம் பயன்படுத்துவதில்லை. மாற்றிவிட்டோம். இதைப் போல் சில வருடங்களுக்கு ஒருமுறை மாற்றங்களை ஏற்படுத்தி விட்டோமானால் ஆங்கிலம் போல் நடைமுறைக்கு ஒத்ததாக புதுப்பித்துக் கொண்டே போகலாம்.
தமிழில் மட்டுமே பயின்றவர்களுக்கும் பிறமொழிக் கலைச்சொற்கள் பழகும். நுட்பங்கள் கைவசப்படும். மொழி அந்தஸ்து பேதங்கள் குறையும். FullஆகவேTamil இல் speakகுவது அதிகரிக்கும்.
வாருங்கள் முதலில் நம் மொழியை வானத்துத் தேவதையாய் வணங்கியதுபோதும். வாழ்க்கையோடு இணைத்துக் கொள்வோம். தகவல்களை, உணர்வுகளை, அறிவை, ஆற்றலை, ஞானத்தை, நுட்பத்தை எல்லாத் திக்கிலிருந்தும் கொணர்ந்து நமக்குள் பரிமாறிக்கொள்ள பயன் படுத்துவோம். நமக்குள்ளே நம் மொழியிலேயே பேசிக்கொள்வதை எளிதாக்குவோம், இனிதாக்குவோம்.  அதை ஒரு  இனத்தின் அடையாளமாக அல்ல; இந்த இகத்தின் அடையாளமாக மாற்றுவோம்.
கருத்துக்களை வரவேற்கிறேன்

குருபார்வையில் மேலும் பல....
·         முதல் காதல்
·         சர்ரியலிசம்
·         சகல கலா வல்லவனாய் மாறுவது எப்படி?
·        கவிதைகள்
·         ........
என்னுடைய படிவங்கள்
எல்லாமும் படியுங்கள்
உற்சாகம் அடையுங்கள்
உளக்கருத்து வடியுங்கள்


வெள்ளி, 12 அக்டோபர், 2012

விஜய தசமி முதல்
(24-10-2012) 

"குரு" பார்வை  மீண்டும்  ஆரம்பம் !



பலப்பல  உற்சாகமான விஷயங்களுடன் உங்கள் பங்கேற்புடன் 

புதுமையான வலைப்பூ மலர 
காத்திருங்கள் 

கொய்து மாலை சூடி மகிழுங்கள்!

(ஆங்கிலம் மற்றும் தமிழ்  இரண்டிலும்)